சென்னை:நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" திரைப்படம் நல்ல ஒரு திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்று வருகிறது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் திகில் நிறைந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.
அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்திஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.
ஒரு நொடி படத்தை இயக்கிய பி.மணிவர்மன் இயக்கும் இந்த படத்தில், ஒரு நொடி படத்தின் நாயகன் தமன் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழு மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.