தமிழ்நாடு

tamil nadu

"பாலியல் தொல்லைகள் குறித்து சங்கத்திடம் சொல்லுங்க"- நடிகைகளுக்கு ரோகிணி அட்வைஸ்! - actress rohini

By ETV Bharat Entertainment Team

Published : Sep 8, 2024, 8:04 PM IST

Actress Rohini: பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை என விசாகா கமிட்டி தலைவரும் நடிகையுமான ரோகிணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் விசாகா கமிட்டி தலைவரான நடிகை ரோகிணி
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் விசாகா கமிட்டி தலைவரான நடிகை ரோகிணி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

விசாகா கமிட்டி தலைவரும் நடிகையுமான ரோகிணி பேட்டி (CVideo Credit - ETV Bharat Tamilnadu)

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் சங்கம் அமைத்த விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி பேசியபோது, " நடிகர் சங்கத்தின் சார்பில் 2019-ல் விசாகா கமிட்டியை உருவாக்கி விட்டோம். அதன் பிறகு சில புகார்கள் வந்தது. அதை நாங்கள் தீர்த்தும் வைத்திருக்கிறோம். தற்போது சில விஷயங்கள் பூதாகரமாகி இருக்கும் நிலையில், நாங்கள் இன்னும் விசாரனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறோம்.

இந்த கமிட்டியில் நடிகர், நடிகைகள் மட்டுமன்றி யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தயக்கமும் இன்றி நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இனிமேல் எந்த ஒரு அத்துமீறலையும் யாரும் சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

5 ஆண்டுகள் தடை:அத்துமீறல்களில் ஈடுபட்டு தவறு செய்து புகாருக்கு உள்ளானவர்கள், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க அவர்களுக்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர். எனவே,பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள் என்றும் அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை.

திரையுலகம் பற்றி அவதூறு பேசப்படுகிறது. சில புகார்கள் வந்தது. அந்த விவகாரம் வெளியே தெரியகூடாது என்பதற்காக அதனை வெளியே சொல்லவில்லை. பெண்களுக்கு எதிராக எந்த துறையில் பாலியல் தொல்லை வந்தாலும் அதனை விட பாதிக்கப்பட்ட நடிகைகளை அவமரியாதையாக பேசி வருகிறார்கள்.

பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கப் பெறுமா? அதற்கு தான் நாங்கள் இருக்கிறோம். எங்கள் சங்கம் இருக்கிறது. அந்த இடத்தில் நாங்கள் இருக்கும்போது எங்களிடம் வந்து நீங்கள் பேசுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை” என்று நடிகை ரோகிணி வலியுறுத்தினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"கடனை அடைக்க கலை நிகழ்ச்சி.. அதில் ரஜினி, கமல்"- நடிகர் கார்த்தி சொல்வது உண்மையா?

ABOUT THE AUTHOR

...view details