டெல்லி: 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (Union Budget) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில், ஊரக வளர்ச்சிக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுத் தாக்கல் செய்யும் எட்டாவது நிதிநிலை அறிக்கையாகும்.
நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ஊரக வளர்ச்சிக்கு, வேளாண்மை, வேலை வாய்ப்பு, நிதித்துறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 6 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், பீகாரில் 'மக்கானா வாரியம்' மற்றும் 100 மாவட்டங்களில் உள்ள 1.7 கோடி விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட் சுகாதாரம், கிராமபுற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முறை தாக்கல் செய்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு (Defence) அடுத்தபடியாக ஊரக வளர்ச்சிக்கு அதிகபடியாக ( ரூ.2.66 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் அறிவித்த ஊரக வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள்:
- “இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சியை முன்னெடுக்க பிரதமர் தன் தான்ய கிரிஷி யோஜனா (Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 100 மாவட்டங்களில் உள்ள 1.7 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
- சிறந்த வகை பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
- கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) மூலம், 7.7 கோடி விவாசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை குறுகிய கால கடன்களை பெற நடவடிக்கை.
- அதிக மகசூல், பூச்சி எதிர்ப்பு மற்றும் காலநிலை தாங்கும் திறன் கொண்ட விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க புதிய திட்டம்.
- உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் (Farmer Producer Organization) உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் அமைப்பை மேம்படுத்துவதற்காக பீகாரில் 'மக்கானா வாரியம்' (Makhana Board) அமைக்கப்படும்.
- கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு (Broadband connectivity) வழங்கப்படும்.
- தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
- சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய ‘கிராம கடன் மதிப்பெண்’ (Grameen Credit Score) வழங்கப்படும்” ஆகிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.