புதுடெல்லி:பஹ்ரைச் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான வீடுகளை இடிக்கும் திட்டம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை மேற்கொள்கிறது.
உத்தரபிரதேசத்தில் குற்றநடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வீடு உள்ளிட்ட சொத்துகளை இடிக்கும் நடவடிக்கையில் அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அனுமதியின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கக்கூடாது என்று கூறப்பட்டது. புல்டோசர் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதற்கு விதிமுறைகள் வகுப்பது குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதி கடந்த 13ஆம் தேதியன்று துர்கா பூஜை ஊர்வலத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 87 பேரை உபி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உபி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி ஆர் கவாய், கே வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி யூ சிங், "வன்முறையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான கட்டுமானங்களை சட்டவிரோதம் எனக் கூறி மாநில அரசு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறது,"என்று குறிப்பிட்டார்.