தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆர்டிஐ எனும் சாமானியனின் வஜ்ராயுதம் - சாதித்தது என்ன? - Right To Information Act

RTI: ஒரு நாட்டின் குடிமக்கள், தங்களை ஆளும் அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை கேள்விக் கேட்கும் வாய்ப்பை பெற்றிருப்பது ஜனநாயக வெற்றிக்கான சிறந்த அடையாளமாகும்.அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

RTI
ஆர்டிஐ கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 6:23 AM IST

ஹைதராபாத்: ஒரு நாட்டின் குடிமக்கள், தங்களை ஆளும் அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை கேள்விக் கேட்கும் வாய்ப்பை பெற்றிருப்பது ஜனநாயகத்தின் வெற்றிக்கான சிறந்த அடையாளமாகும். சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் நடத்தப்படும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஓர் அரசை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருப்பதற்கான நல்ல அறிகுறியாகும்.

தேர்தலுக்குப் பிறகு அமையப்பெறும் ஆட்சியில் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2005ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட RTI எனப்படும் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம், கடந்த இருபது ஆண்டுகளில் தனி நபர்கள், அமைப்புகளால் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேசமயம் இச்சட்டம் அவ்வப்போது சில நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.

ஆர்டிஐக்கு அடித்தளமிட்ட ராஜஸ்தான்:ஆர்டிஐ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, பொதுமக்களுக்கு தவலறியும் உரிமையை பெற்றுதரும் போராட்டம் ராஜஸ்தானில் முன்னெடுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் அருணா ராய் தலைமையில், கடந்த 1994 இல், அம்மாநில விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை அங்கமாகக் கொண்டு மஸ்தூர் கிசான் சக்தி (MKSS) இயக்கம் தொடங்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளின் வரவு - செலவுகள் குறித்து பொது தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்திய இந்த இயக்கம், உள்ளாட்சி நிர்வாகங்களின் நிதி மேலாண்மையில் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்களை அம்பலப்படுத்தியது. உள்ளாட்சி நிர்வாகத்தை பொது விசாரணைக்கு உட்படுத்தும் நேர்த்தியான உத்தியின் மூலம் இது சாத்தியமானது. இதனடிப்படையில், ஆர்டிஐ சட்டத்துக்கு ராஜஸ்தானில் உருவான மஸ்தூர் கிசான் சக்தி (MKSS) இயக்கம் அடித்தளமிட்டது எனலாம்.

அருணா ராயின் எம்.கே.எஸ்.எஸ். இயக்கம் ராஜஸ்தானில் பற்றவைத்த தீ, 1996-இல், தகவலறியும் உரிமை போராட்டமாக தேசிய அளவில் பரவியது. பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தேசிய இயக்கம் (NCPRI) இப்போராட்டத்தை முன்னெடுத்தது. ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அங்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது.

இந்த இயக்கம், பிற தன்னார்வ அமைப்புகள் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து தகவலறியும் உரிமைச் சட்ட மசோதா குறித்த ஓர் வரைவை மத்திய அரசுக்கு அனுப்பியது. "தகவல் உரிமைச் சட்டம் 1997" என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவை உருவாக்கியதில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அப்போதைய தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.பி.சாவந்த் முக்கியப் பங்கு வகித்தார்.

முதல் மாநிலமான தமிழ்நாடு:தகவலறியும் உரிமைச் சட்டத்தை 2005 இல் மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன் பல மாநிலங்கள் இச்சட்டத்தை நிறைவேற்றின. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு, 1997-இல் இச்சட்டத்தை இயற்றியது. ஏழு சட்டப்பிரிவுகளை மட்டும் கொண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு தவலறியும் உரிமைச் சட்டம், சில விதிவிலக்குகளையும் வரையறுத்திருந்தது. பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், ஆளுநருக்கும், மாநில அமைச்சர்களுக்கும் இடையேயான ரகசிய உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் பெற முடியாது என்று வரையறுக்கப்பட்டிருந்தது.தமிழ்நாட்டை தொடர்ந்து, கோவா மாநில அரசும் 1997 இல் இச்சட்டத்தை அமல்படுத்தியது.

இந்தச் சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பாக, பல்வேறு அரசு துறைகளு்ககு நிர்வாகரீதியான உத்தரவுகளை மத்தியப் பிரதேச மாநில அரசு பிறப்பித்தது. இதனிடையே, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி, சொத்து விவரங்கள், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் கோரி, தேர்தல் சீர்திருத்தத்துக்கான ஜனநாயக அமைப்பு (ADR) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இறுதியில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வாக்காளரின் அடிப்படை உரிமை:இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது அவர்களின் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வாக்காளர்கள் அறிவதென்பது, அவர்களின் அடிப்படை உரிமையின் ஓர் அங்கமாகும்.

எனவே, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதிசெய்யும் பொருட்டு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது தங்களின் குற்றப் பின்னணி, சொத்துகள், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை அளிப்பதை கட்டாயமாக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்பே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் வழிமுறை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விதத்தில் வாக்காளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்த ஆர்டிஐ சட்டம்:இதனிடையே, தகவல் உரிமைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இம்மசோதாவில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) மற்றும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தேசிய இயக்கம் (NCPRI) தங்களின் வரைவு மசோதாவில் குறிப்பிட்டிருந்த பல்வேறு அம்சங்கள் நீர்த்துப்போக செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் வரைவு மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன், திருத்தப்பட்ட வரைவு மசோதாவை, அப்போதிருந்த தேசிய ஆலோசனை கவுன்சிலுக்கு பகிரவும் NCPRI -ஐ மத்திய அரசு அறிவுறுத்தியது. இறுதியாக, காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தகவலறியும் உரிமைச் சட்ட மசோதாவை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவில், தகவலறியும் உரிமைச் சட்டம், மத்திய அரசுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இம்மசோதா கடுமையாக விமர்சிக்கப்பட்டது. NCPRI மற்றும் பல தன்னார்வ அமைப்புகளின் தலையீட்டுக்கு பிறகு இம்மசோதாவில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தவலறியும் உரிமைச் சட்டமானது, மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்கும் பொருந்தும் என வரையறுக்கப்பட்டது. இந்த திருத்தங்களுக்கு பிறகு, 2005 அக்டோபர் 12 ஆம் நாள், தகவலறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது.

ஆர்டிஐயின் சாதனைகள்:தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு இயந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் அதில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் வெட்ட வெளிச்சமானது. இதற்கு சமூக ஆர்வலரான மேதா பட்கரின் மக்கள் இயக்கத்துக்கான தேசிய கூட்டமைப்பு ஒரு சிறந்த சான்றாக திகழ்ந்தது. இந்த கூட்டமைப்பின் சார்பில் ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்டப்பட்ட பவ்வேறு கேள்விகளின் மூலம், மகாராஷ்டிர மாநில அரசின் ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது.

குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ், நில உரிமை தொடர்பான விதிகள் கடுமையாக மீறப்பட்டது வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதேபோன்று, 2010 இல் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் அரங்கேறிய முறைகேடுகளும் தன்னார்வ அமைப்பு ( Housing and Land Rights Network) தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

சோதனைகள்:இப்படி ஆர்டிஐ சட்டத்தின் மூலம் அரசு இயந்திரங்களில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல்களை வெளிகொணர்ந்த தனிநபர்கள், அமைப்புகள் என நாடு முழுவதும் நிறைய உதாரணங்களை கூறலாம். அதேநேரம்,, இந்த சட்டம் சில சோதனைகளையும் சந்தித்துதான் வருகிறது. குறிப்பாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசுக்கு ஒருதலைபட்சமாக அதிகாரம் அளிக்கும் வகையில் இச்சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஆர்டிஐ மனுக்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் திருப்தியில்லாதபட்சத்தில், மனுதாரர் செய்யும் மேல்முறையீடுகளுக்கு பதிலளிக்கும் தகவல் ஆணையர்களின் பதவிக்காலத்தை தீர்மானிக்கும் முழு அதிகாரம் மத்திய அரசுக்கே இருக்கும் வகையில் இச்சட்ட திருத்தம் அமைந்திருந்தது.

இந்த சட்டத்திருத்ததுக்கு முன், தகவல் ஆணையர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது அவர்கள் 65 வயதை எட்டுவரை என இவற்றில் எது முந்தையதோ அதுவரை அவர்கள் பதவியில் இருந்தனர். இந்த நிலையில் 2019 இல் ஆர்டிஐ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது தகவல் ஆணையர்களின் அலுவலக சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக அமைந்தது. மிக சமீபத்தில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் (DPDP Act 2023) RTI சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு, சில தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட ஆர்டிஐ சட்டத்தின் விதிவிலக்குகள் அனுமதிக்கின்றன.

அதேபோன்று, பொதுநலன் இல்லாதபட்சத்தில், குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை அரசாங்கம் வெளியிடுவதையும் ஆர்டிஐ சட்டம் தடை செய்கிறது. ஆனால் DPDP சட்டம் இந்த தடைகளை உடைத்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் அரசு அதிகாரிகளால் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அரசின் தலையீடு காரணமாக ஆர்டிஐ சட்டம் சில நெருக்கடிகளை சந்தித்தாலும், இது சாமானிய குடிமக்களின் கையில் உள்ள வலுவான ஆயுதம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஆயுதம் கொண்டே உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி அரசின் உயர்நிலை வரையிலான ஊழல், முறைகேடுகள் வெளிகொணரப்பட்டுள்ளன.

தொடர்ந்து இச்சட்டம் எந்தளவுக்கு திறன்பட பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

கட்டுரையாளர்:ரித்விகா சர்மா - டெல்லியில் உள்ள சட்ட கொள்கைகளுக்கான மையத்தில் (Vidhi Centre for Legal Policy) பணியாற்றிவரும் இவர், நாடாளுமன்ற ஜனநாயகம், தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் கருணை மதிப்பெண் ரத்து; 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details