சென்னை: பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் 25 வயது பெண் காவலர். இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் ஏறியுள்ளார்.
பின், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அவர் இறங்கி நிலையில், பிளாட்பாரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென ஒரு நபர் பெண் காவலரை கீழே தள்ளி விட்டு, அவர் அணிந்திருந்த ஒன்றை சவரன் தங்க செயினை பறித்து விட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால், அப்போது பெண் காவலர் கத்தி கூச்சலிட்ட நிலையில் ரயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் ஓடி வந்து போதை நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்யபாலு (40) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட போது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை இரட்டை படுகொலை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இதையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கைதான சத்யபாலுவிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதான சத்யபாலுவின் பின்னணி குறித்தும், இதற்கு முன்பு இவர் ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டியுள்ளாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.