தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் சரிந்து விழுந்த சுரங்கப்பாதை.. 2-வது நாளாக தொடரும் மீட்புப்பணி! - TUNNEL COLLAPSE RESCUE UPDATE

தெலங்கானா மாநிலத்தின் எஸ்எல்பிசி சுரங்கப்பாதையில் ஏற்பட்ட சரிவில் சிக்கிய 40 சுரங்க ஊழியர்களுள் 32 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாகர்கர்னூல் மாவட்டத்தில், ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி) திட்டத்தின் சுரங்கப்பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது
நாகர்கர்னூல் மாவட்டத்தில், ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி) திட்டத்தின் சுரங்கப்பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது (Press Trust of India)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2025, 12:28 PM IST

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள தோமலாபெண்டா பகுதியில் இயங்கி வரும் சுரங்கப்பாதை, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயில் (எஸ்எல்பிசி) சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதையில் நேற்று (பிப்.22) சனிக்கிழமை வழக்கம் போல் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், திடீரென சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 40 ஊழியர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப், செகந்திராபாத் காலாட்படை பிரிவின் கீழ் இயங்கும் இந்திய ராணுவத்தின் பொறியாளர் ரெஜிமென்ட், இராணுவம் அதன் பொறியாளர் பணிக்குழு (ETF), இராணுவ மருத்துவப் பரிவு ஆகியோர் தெலங்கானா தலைமைச் செயலாளர் தலைமையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த சில மணி நேரங்களில், 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர்.

மீட்புப் பணியில் அதிகாரிகள்:

மீட்புப் பணிகள் குறித்து என்டிஆர்எஃப் துணை கமாண்டன்ட் சுகேந்து தத்தா கூறுகையில், "விபத்துக்குள்ளான சுரங்கப்பாதைக்குள் 8 பேர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை சரிவானது, சுரங்கப்பாதையின் வாயிலில் இருந்து 14 கிலோமீட்டருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 10 மணி நிலவரப்படி சுரங்கப்பாதையின் வாயிலில் இருந்து 13.5 கிமீ தூரத்திற்கு மீட்பு பணிகளை செய்துள்ளோம். 32 பேரை மீட்டுள்ளோம். இரண்டாம் நாளான இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்கள்:

என்ஜின்கள், பம்பிங் செட்கள், கவசக் குழாய்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை செய்து வருகிறோம். இதில், இறுதியாக சுமார் 2 கிமீ தூரம் கன்வேயர் பெல்ட் மற்றும் நடைப்பயணம் மூலம் கடந்து வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர். கடைசி 200 மீட்டர் முழுவதும் படுமையாக சேதம் அடைந்துள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் உடைந்த மணல்களாக இருப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மீட்பு விரர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிய ஊழியர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை. எனவே சுரங்கப்பாதை இடிந்து விழுந்த மணல்கள், கல்களை டன்னல் போரிங் மெஷின் மூலம் அகற்றி சிக்கிய ஊழியர்கள் இருக்கின்றனரா? என தேட வேண்டும். தற்போது சுரங்கப்பாதைக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அது முடிந்ததும் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகளை தொடங்குவோம்” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்:

இந்த சுரங்க விபத்து தொடர்பான மீட்புப் பணிகள் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, மாநில ஆலோசகர் (நீர்ப்பாசனம்) ஆதித்யநாத் தாஸ், முதலமைச்சர் ஆலோசகர் வேம் நரேந்தர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, சுரங்கப்பாதையில் தற்போதைய நிலவரத்தை முதலமைச்சரிடம் விளக்கி, விரிவான தகவல்களை வழங்கினார்.

மேலும், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 8 தொழிலாளர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை முதலமைச்சர் வலியுறுத்தினார். பின்னர், காயமடைந்த தொழிலாளர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழு உதவி செய்யும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:ஹத்ராஸ் பெருங்காயம்: இந்தியாவை உலக வரைபடத்தில் இணைத்த புவிசார் குறியீடு பெற்ற மசாலா!

மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் விரைவில் விபத்து நடந்த இடத்தை அடையும் என்று அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி முதலமைச்சரிடம் தெரிவித்தார். தொடர்ந்து மீட்புப் பணிகளின் போது அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு முழு உதவி செய்வதாக பிரதமர் மோடி உறுதி:

இந்நிலையில்தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் பேசிய பிரதமர் மோடி, மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெலங்கானாவில் நடந்த விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆபத்தில் உள்ளவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகளும், மாநில அரசும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேபோல, கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 40 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்தது. தற்போது, உத்தரகாண்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிபுணர்களின் உதவியை மாநில அரசு நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details