தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே நடந்த சந்திப்பு:சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்ன?

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை முறையாக கையாள்வது, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு (Image credits-IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

கசான்(ரஷ்யா): பிரதமர் நரேந்திர மோடி கசானில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே,சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கான சமீபத்திய ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி,வேறுபாடுகள் மற்றும் மோதல்களை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.

இரண்டு அண்டை நாடுகள் மற்றும் உலகின் இரண்டு பெரிய நாடுகள் என்ற முறையில் இந்தியா, சீனா இடையேயான நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் இணக்கமான இருதரப்பு உறவுகள்,பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.இருதரப்பு உறவுகளை திட்டமிட்ட மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையும் படிங்க:பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை.. பிரிக்ஸ் மாநாட்டில் கர்ஜித்த மோடி!

உத்தி சார்ந்த தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பைக் கண்டறிய வேண்டும் என்றும் தலைவர்கள் உறுதிபூண்டனர். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை முறையாக கையாள்வது என்றும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

இருதலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "இரு நாடுகளை சேர்ந்த சிறப்பு பிரநிதிகள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இருதரப்புக்கும் ஏற்ற தேதியில் சந்தித்துப் பேசுவார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான உத்திப்பூர்வ தகவல் தொடர்புகளை அதிகாரிகள் முன்னெடுத்து செல்வார்கள். அதிகாரப்பூர்வ முறைகளின் மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது,"என்று கூறினார்.2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் இதுவரை 20 முறை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details