டெல்லி: மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 1) தமிழில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது, “ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது.
கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். மாநில அரசுகள்தான் கல்விக்காக 50 சதவீத நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் எனக் கூற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார்.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். மதிய உணவுத் திட்ட நிதியை ஒன்றிய அரசு குறைத்தது ஏன்? குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளதாகவும், இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது ஒன்றிய அரசு என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.