கோயம்புத்தூர்: வால்பாறை வாட்டர் ஃபால் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்தார். இதுகுறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டென்சி எனும் யானை
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கோவை மாவட்டம் வால்பாறை வாட்டர் ஃபால் பகுதியில் டென்சி என்ற 30 வயதான காட்டு யானை மற்ற காட்டு யானை கூட்டங்களில் சேராமல் தனியாக இருக்கிறது. அப்பகுதி மக்களால் 'டென்சி' என்று அழைக்கப்படும் இந்த யானை தனியார் எஸ்டேட் பகுதிகள், குடியிருப்பிடங்கள், வால்பாறை சாலை, சக்தி எஸ்டேட், கவர்கல் போன்ற பகுதிகளில் தனியாக சுற்றி வருகிறது.
இந்நிலையில் நேற்று (பிப்.4) மாலை இந்த காட்டு யானை வாட்டர் ஃபால் டைகர் பள்ளத்தாக்கு சாலையில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியே புல்லட்டில் சென்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல், யானையின் பின்புறம் வந்தபோது காட்டு யானை ஆக்ரோஷமாகியுள்ளது. பின்னர் அது மைக்கேலை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
உயிரிழந்த பயணி
யானை தாக்கியதில் காயமடைந்த மைக்கேலை அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் மீட்டு வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதை அடுத்து மேல்சிகிச்சைக்காக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடற்கூறு ஆய்வு
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் காடம்பாறை காவல் நிலையத்துக்கு விசாரணையை மாற்றியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மைக்கேல் உடல் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. மேலும், இறந்த மைக்கேலின் பாஸ்போர்ட் இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உறவினர்கள் வந்தால் மட்டுமே உடற்கூராய்வு நடத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி பதிவெண்
மேலும், மைக்கேல் ஓட்டி வந்த வாகனம் டெல்லியில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டதாம். விபத்து ஏற்பட்டபோது அவரது செல்ஃபோன் உடைந்துள்ளதால் அதில் இருக்கும் எண்களை போலீசாரால் எடுக்க முடியவில்லை என தெரிகிறது.
ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் டெல்லி பதிவெண் கொண்ட புல்லட் பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றுலா இடங்களுக்கு சென்றுவிட்டு வால்பாறை வந்துள்ளார். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் வால்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தாக்குதல் நடத்திய இந்த காட்டு யானை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள எஸ்டேட் பங்களா காவலாளி மாணிக்கராஜ் என்பவரை காலால் மிதித்து கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வால்பாறை சாலையில் யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கவனமாக வரவேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.