டெல்லி:மத்திய கிழக்கு நாடான குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக கேரளாவைச் சேர்ந்த 24 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேர் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் தூத்துக்குடியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன், திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜூ எபநேசன், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் சடலங்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் என்ற சிறப்பு விமானம் குவைத் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்க மத்திய இணை அமைச்சர் கேவி சிங் தலைமையிலான குழு குவைத் விரைந்துள்ளது.