அமராவதி:ஆந்திராவின் சக்தி வாய்ந்த மற்றும் பிரபலமான அரசியல் பிரமுகரான பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்தவர். ஆட்சி மாற்றத்திற்குப் பின் அவர் வன நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆந்திர அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் அண்மையில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில், முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. ஆந்திர அரசின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இது குறித்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், சித்தூர் மாவட்டத்தின் புலிச்செர்லா மண்டலத்தில் உள்ள மங்கலம்பேட்டை காப்பு வனப்பகுதியில் 104 ஏக்கர் வன நிலத்தை பெத்திரெட்டி அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆவணங்களின்படி கிராமத்துக்கு உட்பட்ட வரம்பில் சர்வே எண்கள் 295 மற்றும் 296-ல் 23.69 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சரோ 77.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை அபகரித்து மொத்தம் 104 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பண்ணையை உருவாக்கினார் என்று ஊழல் கண்காணிப்பு துறை கண்டறிந்துள்ளது. மொத்தப் பரப்பளவு பகுதியையும் சுற்றி வலுவான வேலி அமைத்துள்ளார். ஆந்திர மாநில அரசிடம் அண்மையில் ஊழல் கண்காணிப்புத்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி ஆவணங்களை திருத்தி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தது மட்டுமின்றி அவரது பண்ணைக்கு அரசின் நிதியில் சொந்த உபயோகத்துக்காக ஒரு சாலையையும் போட்டுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஈநாடு தெலுங்கு நாளிதழ் இந்த ஊழலை கடந்த ஜனவரி 29ஆம் தேதி பிரத்யேகமாக வெளிக் கொண்டு வந்தது. பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் எப்படி இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களையும் ஈநாடு வெளியிட்டிருந்தது. எனினும் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த எஸ்டேட்டை வாங்கியதாக கூறினார். சட்டத்துக்கு மாறாக நிலத்தை கைப்பற்றியதை நியாயப்படுத்த முயற்சி செய்தார். சர்வே எண்கள் 295 மற்றும் 296ல் உள்ள நிலத்தின் பரப்பளவு 75.74 ஏக்கர் எனவும் கூறினார். இது நில தீர்வு இயக்குநர் அல்லாத ஒரு நபரின் அறிவிப்பாகும்.
மேலும், 1968-ம் ஆண்டு வனத்துறையின் அரசிதழில் இது குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமக்கு ஆதரவாக சில தாள்களையும் அவர் காண்பித்தார். எனினும் ஊழல் கண்காணிப்பு துறையானது பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி, மங்களம்பேட் வனப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளார் என்பதற்கான 7 ஆதாரங்களை தாக்கல் செய்திருக்கிறது. ஊழல் கண்காணிப்பு அலுவலர்கள் வருவாய் துறையின் இணையதளம், ஆர்ஓஆர், விலங்க சான்றிதழ்கள், பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணங்கள், மாற்றத்துக்கு உள்ளான விவரங்கள், ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட கூகுள் எர்த் புகைப்படங்களை ஆய்வு செய்திருந்தனர்.
ஊழல் கண்காணிப்பு துறையின் ஆய்வின் படி, கூறப்பட்டுள்ள இரண்டு சர்வே எண்களின்படி உண்மையில் உள்ள நிலத்தின் பரப்பளவு 23.69 ஏக்கர் மட்டுமே. ஆனால், பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட விற்பனைப் பதிவு ஆவணத்தில் 45.80 ஏக்கர் நிலம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் வெப்லேண்ட் என்ற இணையதளத்தில் உள்ள தகவலின்படி , மொத்தப் பரப்பளவு 77.54 ஏக்கர் ஆகும். 10-1 அடங்கலில் உள்ள நிலத்தின் பரப்பளவு 86.65 ஏக்கர் ஆக உள்ளது. எனினும் ஊழல் கண்காணிப்பு துறையின் அறிக்கையின்படி கள அளவிலான ஆய்வில் மொத்தம் 104 ஏக்கர் பரப்பிலான நிலம் வேலியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கண்காணிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 ஆதாரங்கள்
தேர்தல் அபிடவிட்டில் கூறப்பட்டுள்ள தகவல்:பெத்திரெட்டி மற்றும் அவரது மகன் மிதுன் ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்த தேர்தல் அபிடவிட்டில் அவர்களுக்கு சொந்தமாக 75.74 ஏக்கர் நிலம் சர்வே எண்கள் 295 மற்றும் 296ல் கூறப்பட்ட கிராமத்துக்கு உட்பட்ட வரம்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1905 மற்றும் 1920ஆம் ஆண்டுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட நில ஆய்வின்படி 295 எனும் சர்வே எண்ணின் மொத்தப் பரப்பளவு 17.69 ஏக்கர் மட்டுமே. சர்வே எண் 296ன் நிலம் பரப்பளவு 6 ஏக்கர் மட்டுமே. இரண்டும் சேர்ந்து 23.69 ஏக்கர் நிலம் ஆகும். உண்மையான அரசு ஆவணங்களின் படி இயல்பில் இந்த நிலம் வறண்ட நிலமாகும்.
பக்கலா துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம்
பக்கலா துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணத்தில் 45.80 ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சர்வே எண்கள் 295 மற்றும் 296ல் உண்மையான நிலத்தின் பரப்பளவு 23.69 ஏக்கராகும். பெத்திரெட்டி அவரது மகன் ஆகிய இருவரும் பெற்ற பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணத்தில் கூறப்பட்ட சர்வே எண்களில் 45.80 ஏக்கர் பரப்பளவு நிலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சர்வே எண்கள், உப பிரிவுகளைக் கொண்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் கூறுவது, இந்த சர்வே எண்களின் கூடுதல் நிலம் என்பதாக இருக்கிறது.
பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 2346/2000-ன்படி பெத்திரெட்டி லட்சுமி தேவி சர்வே எண்295/1A கொண்ட நிலத்தை தேசிரெட்டி மங்கம்மா என்பவரிடம் இருந்து 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி வாங்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 2347/2000 என்ற எண் கொண்ட பதிவு ஆவணத்தின்படி தேசிரெட்டி ஸ்ரீராமுலுவிடம் இருந்து பெத்திரெட்டி இந்திராம்மா கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி 10.80 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. சர்வே எண் 295/1c கொண்ட 10 ஏக்கர் நிலத்தை பெத்திரெட்டி மிதுன் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தேசிரெட்டி செங்கா ரெட்டியிடம் இருந்து வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. இது 2/2001 என்ற விற்பனை ஆவண எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உண்மையில் 295 என்ற சர்வே எண்ணில் 17.69 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. பெத்திரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் அதே சர்வே எண்ணில் 36.69 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். அதே சர்வே எண்ணில் கூடுதலாக 19 ஏக்கர் நிலம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. சர்வே எண் 296ல் 6 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. எனினும் 2001ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 2/2001 என்ற விற்பனை ஒப்பந்தத்தின்படி தேசிரெட்டி சர்வேஸ்வரா ரெட்டியிடம் இருந்து 9.11 ஏக்கர் நிலத்தை பெத்திரெட்டி இந்திராம்மா வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சர்வே எண் 296ல் உண்மையான பரப்பளவுடன் 3.11 ஏக்கர் நிலம் சேர்க்கப்பட்டுள்ள என்ற அர்த்தத்தைக் குறிப்பிடுகிறது. கண்காணிப்பு துறையின் தகவலின்படி 45.8 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் 77.54 ஏக்கராக வெப்லேண்ட் இணையதளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.