டெல்லி:தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் காலிக் குடங்கள், டிரெம்களை கொண்டு தண்ணீருக்காக அலை மோதுகின்றனர். அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து போதிய அளவில் டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய தண்ணீர் பெற்றுத் தருமாறு ஆம் ஆத்மி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 22ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
தொடர்ந்து நான்கு நாட்கள் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதை அடுத்து இன்று (ஜூன்.25) அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள லோக் நாயக ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் அவரது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சீரற்ற நிலைக்கு சென்றதாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.