நெல்லையில் நிரம்பிய அணைகள் - வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி
திருநெல்வேலியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைக்கு வரும் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நெல்லை மாநகர் கொக்கிரக்குளம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.