மணிரத்னம் இயக்கத்தில் 2004ஆம் வெளியான 'ஆயுத எழுத்து' என்ற படத்தின் மூலம் உதவி இயக்குநராக களமிறங்கி தற்போது தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம்வரும் நடிகர் தான் கார்த்தி. இவர், மூத்த நடிகர் சிவகுமாரின் மகன் என்பதும் பிரபல நடிகர் சூர்யாவின் தம்பி என்பதும் உலகறிந்தது. சினிமா துறையில் கால்பதித்து, சில ஆண்டுகள் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பிறகு 2007ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் அமீரின் 'பருத்திவீரன்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கிய கார்த்தி 2010ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்து மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அதன் பிறகு பையா, சகுனி, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் வெளியான தம்பி, கைதி, கடைக்குட்டி சிங்கம் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் தனது குருநாதர் மணிரத்னத்துடன் இணைந்து அவரது பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.