விஜயகாந்த் மறைவு; திருவாரூரில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jan 3, 2024, 11:04 AM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-01-2024/640-480-20416453-thumbnail-16x9-vijay.jpg)
திருவாரூர்: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், அவரது மறைவையொட்டி கட்சி மற்றும் அமைப்பு பாகுபாடு இல்லாமல், பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்ட தேமுதிக சார்பில் தேமுதிக மாவட்ட தலைவர் சண்முகராஜ் தலைமையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி ஊர்வலம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கி, விஜயபுரம் கடைத்தெரு நேதாஜி சாலை தெற்கு வீதி வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பழனி ஆண்டவர் கோயில் அருகில் நிறைவடைந்தது.
இந்த அமைதி ஊர்வலத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விஜய் மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி ஊர்வலம் பழனி ஆண்டவர் கோயில் அருகில் நிறைவடைந்ததையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் புகைப்படத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.