Dindigul:ஜவுளி கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.. போலீசார் வலைவீச்சு
திண்டுக்கல்: பிரபல ஜவுளி கடையில் பணம் மற்றும் ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் பிரபல தனியார் ஜவுளி நிறுவனம் பல வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நான்கு மாடிகள் கொண்ட இந்த ஜவுளி நிறுவனக் கட்டடத்தில் நான்காவது மாடி மேல் தளத்தில் ஜவுளி கடையின் குடோன், கடையின் முக்கிய ஆவணங்கள், கடையின் வருவாய் பணம் ஆகியவகைள் வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று பணி முடிந்து ஊழியர்கள் அனைவரும் கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, இன்று (ஜூன் 15) வழக்கம் போல், பணியாளர்கள் பணிக்கு வந்து கடையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது நான்காவது தளத்தில் உள்ள கதவுகளில் பூட்டுகள் உடைக்கபட்டும், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும் இருந்துள்ளதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்தளத்திற்கு சென்று பார்த்தபோது, கணக்கு வைப்பறை மற்றும் பணம் இருப்பு வைத்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதையடுத்து இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் விரைந்து வந்த போலீசார், விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையின் முதல் கட்டமாக, கடைக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்குள் நுழைந்த சிலர் சிசிடிவி காட்சிகள் பதிவிடும் கேமராக்களை துணியை கொண்டும் மூடும் காட்சிகளை கைப்பற்றி இதனைக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.
இதன் பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் உள்ள பொருட்களில் பதிந்திருந்த கைரேகைகளை கைப்பற்றினர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், எத்தனை பேர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றும் பணம் மற்றும் ஐவுளிகள் எவ்வளவு கொள்ளையடித்து சென்றனர் என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைக்கு எவ்வளவு தில்லு பாரு.. சீருடையுடன் மு.க.ஸ்டாலினை விமர்சித்து மீம்ஸ் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்!