நவராத்திரி விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3000 பொம்மைகளை கொண்டு பிரம்மாண்ட கொலு!
Published : Oct 16, 2023, 9:42 AM IST
கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கோயிலினுள் உள்ள கொலு மண்டபத்தில் கொலு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள ஜீவ ராசிகளை வணங்கி வழிபடுவதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த கொலு அமைக்கப்படுகிறது.
தற்போது இந்த கொலு 21 அடி உயரத்தில், 21 அடி அகலத்தில், 21 படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டு, கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நடராஜர் - சிவகாமி சுந்தரி பிரமாண்ட சிலையும், முருகர், சண்டிகேஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி திருமண கோலங்கள், அரசர்கள் ஆட்சி செய்த முறைகள், நீதிக் கதைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என பல உருவங்களில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.
பல்வேறு வடிவிலான சுமார் 3 ஆயிரம் பொம்மைகளைக் கொண்டு வைக்கப்பட்டுள்ள இந்த கொலுவுக்கு தினமும் தீட்சிதர்களால் பூஜை செய்யப்படும். மேலும் இந்த பிரம்மாண்ட கொலுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமானோர் பார்வையிட்டு ரசித்தனர்.