நவராத்திரி விழா; சரஸ்வதி அலங்காரத்தில் ஸ்ரீ பெரிய நாயகி அம்மன்! - இந்து சமய அறநிலையத்துறை
🎬 Watch Now: Feature Video
Published : Oct 22, 2023, 7:09 AM IST
தஞ்சாவூர்: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்களும் தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்படும். அந்த வகையில், அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், சதஸ் அலங்காரம், காயத்ரி அலங்காரம், அன்னபூரணி அலங்காரம், கெஜலட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், ராஜராஜேஸ்வரி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், விஜயதசமி அலங்காரம் போன்ற அலங்காரங்கள் நடைபெறும்.
மேலும், கலை நிகழ்ச்சியாக தினமும் தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம், பக்தி பாடல்கள், வீணை இசை நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பரத நாட்டியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கோயில்களான தெற்குவீதி ஸ்ரீ காமாட்சி அம்மன் என்கிற காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரமும், அருள்மிகு ராஜமாதங்கி என்கிற சரஸ்வதி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் மற்றும் மேலவீதி அருள்மிகு கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரமும் செய்யப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்து சாமி தரிசனம் செய்தனர்.