Video: பழனி அருகே 300 மேற்பட்டோர் அரங்கேற்றிய கும்மியாட்டம்! - today news in tamil
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்: பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பயிற்சியாளர்களால் கும்மியாட்டம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஸ்ரீ பவன் கலைக்குழுவின் சார்பில் கும்மி நடனம் அரேங்கேற்றம் நிகழ்ச்சி சின்னகலையம்புத்தூரில் நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர்.
இசைக்கு ஏற்றபடி கிராமிய பாடல் பாடியதோடு, ஒரே மாதிரியான ஆடை அணிந்து கும்மி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கிராமங்களில் பாரம்பரியமாக ஆடப்படும் கும்மியாட்டம் தற்போது மெல்ல மெல்ல மறைந்து வந்த நிலையில் மீண்டும் புத்துயிர் அளித்து கும்மி ஆட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிராமம் தோறும் சென்று மக்களை ஒன்றிணைத்து கும்மி பாடல்கள், கும்மி ஆட்டத்தை கற்றுக் கொடுக்கும் இளைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி ஊக்கப்படுத்தி வருகின்றனர். கும்மியாட்டத்தின் போது அம்மன், முருகன், வள்ளி புகழ்பாடியும், புராண கதைகளை பாடியும் கும்மியாட்டம் நடைபெறும். கும்மியாட்டத்தை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஆடுவதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது.