சென்னை: கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், ரூ.210 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு “பெரியார் அரசு மருத்துவமனை” என்று பெயர் சூட்டிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இம்மருத்துவமனை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது. பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8.3.2023 அன்று மூன்று தளங்களுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மருத்துவமனையின் சிறப்புகள்:
அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 2024 மார்ச் 7ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ஆறு தங்களுடன் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனையின் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கங்கள், நவீன இரத்த வங்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
சென்னை, கொளத்தூரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரூ. 210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் " பெரியார் அரசு மருத்துவமனை" என்று பெயர் சூட்டிட ஆணையிடப்பட்டு, விரைவில் திறக்கப்படவுள்ள அம்மருத்துவமனையினை மாண்புமிகு… pic.twitter.com/gMBXv3orQS
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 23, 2025
முதலமைச்சர் ஆய்வு:
இப்புதிய மருத்துவமனையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.23) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதனையடுத்து முதல்வர் படைப்பகத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதாவது, கொளத்தூர், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பகிர்ந்த பணியிட மையம் மற்றும் மாணவர்களுக்கான “கல்வி மையம்” உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்த பணியிடத்தில் பணிபுரிவோர்களிடம் உரையாடி, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை, கொளத்தூர் ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பகிர்ந்த பணியிட மையம் மற்றும் மாணவர்களுக்கான " கல்வி மையம்" உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சென்று… pic.twitter.com/WdYYd7xJer
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 23, 2025
முதல்வர் படைப்பகம்:
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இணைந்து ரூ.2.85 கோடி செலவில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் “Co-working Space” தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 4.11.2024 அன்று திறந்து வைத்தார். முதல்வர் படைப்பகத்தில் UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
அத்துடன், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சுமார் 40 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராசா, டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் அதிக ஒலி பயன்படுத்தப்பட்டதா? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
முன்னதாக நேற்று காலை கொளத்தூரில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். மும்மொழிகொள்கையை ஏற்க முடியாது, இரு மொழிகொள்கை தான் எங்களுக்கு வேண்டும் என கூறும் அளவுக்கு ஆற்றல் பெற்றுள்ளோம்" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "5 ஆயிரம் கோடி அல்ல, 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம், அதில் கையெழுத்து போட மாட்டேன் என தெளிவாக சொல்லிவிட்டேன்" என உறுதியுடன் தெரிவித்தார்.