திராவிட மாடல் பயிற்சி பட்டறை; புதிய அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! - chief minister mk stalin
🎬 Watch Now: Feature Video

தஞ்சாவூர்: கலைஞர் அறிவாலயத்தில் மாநில திமுக இளைஞரணி சார்பில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஏப்.4) மாலை நடைபெற்றது. இந்த நேர்காணலில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து அவர்களின் கட்சிப் பணி குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் கேட்டறிந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, இளைஞர் அணி தலைவராக நான்கு வருடத்திற்கு முன்பு பொறுப்பேற்ற போது தொகுதிக்கு பத்தாயிரம் இளைஞர்கள் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டு 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது, "தற்போது கட்சியில் உறுப்பினராக ஒரு கோடி பேர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் உத்தரவுபடி திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொகுதி வாரியாக முடிந்து, அடுத்ததாக இன்னும் 15 தினங்களுக்குள் ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை பணிகளில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.