"விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஈடுபடுத்துவது மூலம் போதை பழக்கத்திலிருந்து மீட்க முடியும்" - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு..! - Sylendra Babu
🎬 Watch Now: Feature Video


Published : Dec 15, 2023, 8:55 PM IST
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள மண்டபத்தில் தனியார் செக்யூரிட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு முன்னாள் காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு, விழாவைக் குத்து விலக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய அவர், "தனியார் செக்யூரிட்டியில் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும். இவர்கள் குற்றங்களைத் தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார். அதன்பின் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு; "தமிழகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதைப் பொருளைச் சமுதாயத்தில் அதன் தேவையைக் குறைக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
மேலும், இளைஞர்கள், மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து மீட்கக் காலையில் 1 மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே போல் அவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவதன் மூலம் போதை பழக்கத்திலிருந்து மீட்க முடியும்" என தெரிவித்துள்ளார்.