குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம்..! 6வது நாளாக குளிக்கத் தடை! - குற்றாலத்தில் வெள்ளம் எச்சரிக்கை
🎬 Watch Now: Feature Video


Published : Dec 22, 2023, 11:34 AM IST
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் குறையாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆறாவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காற்றாற்று வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் கல், மரப்பலகைகள், மணல் போன்றவைகள் அடித்து வரப்பட்டன.
இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி விதிக்கப்பட்ட இந்த தடையானது, வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் தற்போதுவரை, மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 6வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது குற்றால ஐந்தருவியில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஐந்தருவியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும், அருவிகளில் எப்போது வேண்டுமானாலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.