ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?
Published : Dec 14, 2023, 10:46 PM IST
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மேல்வைத்தனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்சான் என்பவர் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று (டிச.14) மாலை பணி முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கைலாசகிரி பகுதியிலிருந்து மேல்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அப்சான் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த, அப்சான் இருசக்கர வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் தீ இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால், அந்த சாலை முழுவதும் புகை சூழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர், தீயணைப்பு கருவி கொண்டு தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் இருசக்கர வாகனம் தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.