மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் கோவிட் மூன்றாம் அலையில் இளவயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (Andres Manuel Lopez Obrador) திங்கள்கிழமை (ஜூலை 12) செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவிட் மூன்றாம் அலையில் இளவயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள் அதிக பாதுகாப்பாக இருத்தல் அவசியம்” என்றார்.
இளையோர் பாதிப்பு
மெக்சிகோவை பொறுத்தமட்டில் எளிதில் நோய் தாக்கும் நபர்களை காட்டிலும், பதின்ம மற்றும் இளவயதினர் அதிகமானோர் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் மெக்சிகோவில் கரோனா மூன்றாவது அலை தாக்கியது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
29 சதவீதம் அதிகரிப்பு
கரோனா பாதிப்பு அதிகரிப்பு வைரஸின் டெல்டா மாறுபாட்டின் வருகையால் அல்ல, மெக்சிகோவில் கடந்த வாரம் கரோனா வைரஸ் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டது.
முந்தைய தொற்று பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் தடுப்பூசி திட்டம் 30 வயதுக்கு உட்பட்டோருக்கு இன்னமும் சரிவர சென்றுசேரவில்லை.
அனைவருக்கு தடுப்பூசி
கோவிட் மூன்றாம் அலையில், 30-39 வயதிற்குள்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. தடுப்பூசி சரிவர கிடைக்காததும் இதற்கு ஒரு காரணம்.
நமது நாட்டில் 40 வயதை கடந்த பெரியவர்களுக்கு மட்டும்தான் முதலில் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்து அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை நமது அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது.
மெக்சிகோ கரோனா நிலவரம்
இவ்வாறு அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
இதையும் படிங்க : செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்