விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி செல்லும் சாலையில் பஞ்சாயத்துக்குச் சொந்தமான கிணறு ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் இன்று (அக். 06) அவ்வழியாகச் செல்லும்போது கிணற்றில் துர்நாற்றம் வீசியதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, கிணற்றுக்குள் பார்த்தபோது, சாக்குமூட்டையில் சடலம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையிலான காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.
பின்பு, அந்தச் சடலம் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குறிச்சியில் குளத்தில் மிதந்த பெண் உடல் மீட்பு