விருதுநகரில் பாஜகவினர் சார்பில் பழைய பேருந்து நிலையம், வி.வி.ஆர். சிலை, நெல் கடை மைதானம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் வேட்பாளர் பாண்டுரங்கன் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் சூழ்நிலையில், பாரதிய ஜனதா விருதுநகர் நகரக் கழகம் சார்பில் கரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை, பாஜக விருதுநகர் நகரச் செயலாளர் புஷ்பராஜ் ஏற்பாடுசெய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கரோனா தொற்றைத் தடுக்கும்வகையில் கபசுரக் குடிநீரும், முகக்கவசமும் வழங்கப்பட்டன.
பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், அரசின் கரோனா நெறிமுறைகளைக் கடைப்பிடித்து செயல்பட்டனர்.
மேலும், இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் பொன்ராஜ், மாவட்டத் துணைத் தலைவர் செ. காமாட்சி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகரப் பொருளாளர் மணிராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவி சாந்தி மாரியப்பன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.