விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் பணிபுரிபவர்களை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வேனில் அழைத்துச் சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில், இன்று சிவகாசி, சூரநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 15 தொழிலாளர்களை கார்த்திக்ராஜா என்பவர் வேனில் ஏற்றிக்கொண்டு ஆலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
வேன் சுப்பிரமணியபுரம் அருகே செல்கையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பின்னர் திடீரென சாலை நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருமுத்து(36), துரைப்பாண்டி(17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 14 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்த சாத்தூர் காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.