விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவூத்து தெப்பக்குளத்தில் விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலர் நீச்சல் பழகி வருகின்றனர். இந்நிலையில், வத்திராயிருப்பு வெள்ளாளர் நடு தெருவைச் சேர்ந்த சரவணன் (16) என்ற பள்ளி மாணவர் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாத சரவணன் தனது உடலில் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேனை கட்டிக்கொண்டு நீச்சல் பழகியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:புழல் ஏரியில் வணிகவரித்துறை ஊழியரின் சடலம் கண்டெடுப்பு - காவல்துறை விசாரணை!