விருதுநகர் மாவட்ட கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவம்பர் 3) சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "வீழ்ச்சியுற்ற தமிழ்நாடு எழுச்சி பெற வேண்டும், இந்திய மாநிலங்கள் மத்தியில் பின்தங்கிய தமிழ்நாட்டின் பெருமையை மீட்க உறுதியெடுக்க வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விருதுநகரில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பார்க்கும் போது 234 தொகுதிகளையும் திமுக கூட்டணி பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1787 குடியிருப்புகள் குடிநீர் வசதி பெற்று பயன்பெறும் வகையில் ‘தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ. 597 கோடி செலவில் திமுக ஆட்சியில் தொடக்கி வைக்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் பள்ளிகள் ஏராளமாக திறக்கப்பட்டன என்றால், திமுக ஆட்சியில் கல்லூரிகள் அதிகமாக திறக்கப்பட்டன. காமராஜர் ஆட்சியில் பள்ளிக் கல்வி சிறப்புற்று விளங்கியது என்றால், திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வியோடு கல்லூரிக் கல்வியும், உயர் கல்வியும், மருத்துவக் கல்வியும் சிறந்து விளங்கியது. ஆனால், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டன.
அனைவருக்கும் கல்வி என்பதை சிதைக்கக் கூடியதாக மத்திய அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. சிலர் மட்டும் படித்தால் போதும் என்கிற அளவுக்கு தேர்வுகளை கட்டாயமாக்கி, பெரும்பாலான மாணவர்களை படிப்படியாக கல்விக் கூடங்களில் இருந்து விரட்ட திட்டமிட்டு இருப்பதுதான் புதிய கல்விக் கொள்கை.
இந்தக் கல்விக் கொள்கையை அதிமுக அரசு ஆதரிக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதிலிருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். திமுகவின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு கிடைத்துள்ளது.
![MK Stalin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9420018_stalin.png)
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசு என்பது நமது இலட்சியம். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அதிமுக அரசின் அடையாளம். தாங்கள் மட்டுமே வளம் பெற்றால் போதும் என நினைக்கும் 30 பேரின் விருப்பத்துக்கும், வசதிக்கும் நடைபெறுகிற அதிமுகவின் ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்கான போர்தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்" என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.