விருதுநகர்: சிப்பிப்பாறையைச் சேர்ந்த சிவ பாலசுப்ரமணியன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஆறு பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனு தாக்கல்செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,
"எங்களின் உறவினர்களாகிய ஆறு பேரும் 2020ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சிப்பிப்பாறையிலுள்ள ராஜம்மாள் பயர் ஒர்க்சில் நடந்த வெடி விபத்தில் சிக்கினர். இதில் படுகாயமுற்றவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்குச் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதில், அரசு நிவாரணமாக 10 லட்ச ரூபாய் மற்றும் அரசு வேலை அறிவித்தது. மேலும் தற்காலிக நிவாரணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவித்தது, ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நிவாரணமும் அளிக்கவில்லை.
தற்பொழுது வருவாய் இன்றி எங்களது குடும்பங்கள் தவித்துவருகின்றன. எனவே எங்கள் பொருளாதாரத்தைக் காத்திட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசுத் தரப்பில், சாத்தூர் தீ விபத்தில் இறந்தவர்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு
அதையடுத்து நீதிபதி, "சாத்தூர் ராஜம்மாள் பயர் ஒர்க்ஸில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் வீதம் 42 லட்ச ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கத் துணை நின்ற அரசு வழக்கறிஞருக்கும், இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. இந்த இழப்பீடு அவர்களின் துயரைச் சிறிதளவாவது துடைக்கும்.
இவ்வழக்கில் யாராவது தனிநபர்கள் நிவாரணம் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க:3 நாள்களுக்கு தமிழ்நாட்டின் வானிலை இப்படித்தான் இருக்குமாம்!