இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
இவர், 76 நாள்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13 இல்உயிர் நீத்தார். அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே "தமிழ்நாடு" என்ற பெயருக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. இதனையடுத்து சட்டப் பேரவையிலும், மக்களவையிலும் இந்தக் கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது.
அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு அமைப்பினர் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் "தமிழ்நாடு” என பெயர் மாற்றக் கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வந்தபோது, தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு" என்ற பெயரை மெட்ராஸ் மாநிலத்துக்கு சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பிறகு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 ஆம் ஆண்டு நவம்பர் 23இல் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணம், "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு என பெயர் மாற முக்கியக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாரின் 63ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர். இவரின் உயிர்த் தியாகத்தை போற்றும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சங்கரலிங்கனாரின் சொந்த ஊரான விருதுநகரிலேயே மணிமண்டபம் அமைத்து அவருக்கு சிறப்பும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு படையினர்!