விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகைதந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் வாரத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று அதிகாலை 3 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அதிகாலை 5.30-க்கு காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்குச் செல்ல முடியாத பக்தர்கள், காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள், தானிய பொருள்கள் போன்றவற்றை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்குவார்கள்.
இதனால் நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. கரோனா அச்சம் காரணமாக சீனிவாச பெருமாள் கோயிலுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 10 வயதிற்கு கீழ் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.
உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.