விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதியம்மாள்(55). இவர் தனது விவசாய நிலத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென வந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக அக்கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர் .
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.