வரும் பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலில் உள்ள நிலையில், கடந்த வாரம் தொடங்கி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், மூன்று பிரிவுகளாக 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை பணியில், பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (மார்ச்.09) மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அழகாபுரி பகுதியில், வாகனச் சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகாபுரியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனத்தில், பெட்ரோல் நிலைய ஊழியரான பார்த்திபன் என்பவர் சென்றுள்ளார்.
அவரை நிறுத்தி சோதனை செய்ததில் நான்கு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அப்பணத்தை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெட்ரோல் நிலைய வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்காக பணத்தைக் கொண்டு செல்வதாக அந்நபர் தெரிவித்தார். பின்னர் அவரிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சரவணனிடம் பறக்கும் படை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது