விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிவருபவர் தற்போது ராஜபாளையம் பகுதியில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட தற்காலிகமாக சுகாதார ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியில் கரோனா தொற்று அறிகுறி இருக்கும் நபர்களிடமிருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு விருதுநகர், மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வகங்களில் கொடுத்துவந்துள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த மூன்று நாள்களாக அவருக்கு கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் அவருக்கு தென்பட்டுள்ளன. இதனையடுத்து தாமாக முன்வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விருதுநகர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது. பின்னர், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் அவருடன் தங்கியிருந்த அவரது தாய், தந்தை இருவருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பபட்டு அவர்களை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!