விருதுநகர்: 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவரது குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டிற்குச் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் இவர்களுடைய பட்டா நிலத்தையும் சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
பட்டா நிலத்தை அளந்து தரக் கோரியும், பொதுப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மீனாவின் குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று தங்களது வீட்டிற்குச் செல்லும் பொதுபாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியர் வாகனத்தின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சூழலில் தர்ணா போராட்டம் நடத்திய மீனா குடும்பத்தினரிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.