விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (அரசு ஒப்பந்ததாரர்). இவருக்கு 2017ஆம் ஆண்டு இருக்கன்குடி ஆய்வாளரின் ஜீப் ஓட்டுநராக இருந்த காவலர் ராஜபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜபாண்டி தற்போது சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
ராஜபாண்டி திருமங்கலத்தில் உள்ள தனது சித்தப்பா மகன் சரவணன் (45) என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பிஆர்ஓவாக பணியாற்றி வருவதாகவும், அவரது தந்தை திருவள்ளுவன் திருமங்கலம் நகராட்சி அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் கூறி கண்ணனிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.
சரவணன் தனக்கு அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும், எந்த அரசு வேலையா இருந்தாலும் வாங்கிக் கொடுப்பதாகவும் கண்ணனிடம் கூறியுள்ளார். இதை நம்பி கண்ணன் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 41 பேரிடம் அரசு வேலைக்காகவும், அரசு ஒப்பந்தத்திற்காகவும் ரூபாய் 2.73 கோடி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வங்கி மூலமாகவும் நேரடியாகசவும் பணத்தை பெற்ற சரவணன், மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் கண்ணன் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிந்து சரவணனை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது தந்தை திருவள்ளுவனை தேடிவருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற மோசடி வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.