விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதியான மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகிய பகுதிகளிலிருந்து நெல் மூட்டைகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 15) செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 4,000 நெல்மூட்டைகள் வந்துள்ள நிலையில் 2,000 மூட்டைகள் மட்டுமே பாதுகாப்பாக கட்டட தளத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே வியாபாரிகளின் மூட்டைகள் குடோனில் இருந்ததால் விவசாயிகளின் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டன.
இன்று (டிசம்பர் 16) காலை பெய்த திடீர் மழையினால் அனைத்து மூட்டைகளும் நனைந்து சேதமடைந்தன. பிறகு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலிருந்து தார்ப்பாய் மூலமாக நெல் மூட்டைகள் மூடப்பட்டன இருப்பினும் நூற்றுக்கணக்கான மூட்டைகள் முழுவதுமாக நனைந்தன.
வியாபாரிகளின் நெல் மூட்டைகள் தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் ஆக்கிரமித்து இருப்பதால் விவசாயிகள் நெல் மூட்டைகள் நனைவது தொடர்கதையாக உள்ளது. விரைவில் இதற்கு முறையான தீர்வுகாண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.