லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவதைத் தடுக்கவும், அது தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், "நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை, கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, நான் அனைத்துச் செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன்.
லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன். அனைத்துச் செயல்களிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவேன். பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன்.
தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன். ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்புக்குத் தெரியப்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்" எனக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.