வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் மகள் (15) வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடம் விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் தீக்காயத்துடன் இருந்த சிறுமியை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் உடலில் 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ”நான் தச்சு வேலை செய்கிறேன் எனது மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகிறார். எனது மகள் அரசுப் பள்ளியில் 10வகுப்பு முடித்து 11ஆம் வகுப்பு செல்கிறார். தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், நாங்கள் இருக்கும் பகுதியைச் சேர்ந்த பெயிண்டராக வேலை பார்க்கும் 2 சிறுவர்கள், எனது மகள் குளிக்கும்போது செல்போனில் படம்பிடித்துள்ளனர். அப்படத்தை என் மகளிடம் காட்டி, தாங்கள் அழைக்கும்போது வர வேண்டும் என்றும், இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி விடுவோம் எனவும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த எனது மகள் நாங்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தீ குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த இரு சிறுவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தோனி பட நாயகன் தற்கொலை!