வேலூர்: கடந்த சில நாள்களாக வேலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில் சுமார் 20ஆயிரம் கனஅடி தண்ணீர் வேலூரில் உள்ள கவுண்டண்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது படிப்படியாக நீர்வரத்து குறைந்து, கவுண்டண்யா ஆற்றில் மூன்றாயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில், குடியாத்தம் மையப்பகுதியில் உள்ள கவுண்டன்யா ஆற்றின் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், கட்டடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று (நவ.27) தொடங்கியது.
இதனிடையே, ஆக்கிரமிப்பாளர்கள் காலஅவகாசம் கேட்டு 200க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் காவல்ஆய்வாளர் லக்ஷ்மி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது, திடீர் சாலை மறியலால் பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் பாலம் வரை சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: Chengalpattu Flood: மழை நீரில் தத்தளிக்கும் கலால் காவல் நிலையம்