வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிஷா பி.நகர் மலைப் பகுதியில் உள்ள 8க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் இரவில் வெட்ட வெளியில் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பிலால் நகர் பகுதியில் இயங்கி வரும் தேசிய குழந்தை பயிற்சி பள்ளியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததால் அப்பள்ளியில் பயிலும் 30 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவு, புத்தகப்பை, அரிசி மற்றும் பருப்பு பொருட்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. மேலும் , அப்பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கியுள்ளதால் சாலையில் நடந்து செல்ல குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்துள்ள வீடுகள் மற்றும் பள்ளியை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.