வேலூர் மாவட்டம் அரசு குடும்ப நலத்துறை சார்பில், சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் சோமாலியா நாட்டைப் போன்று இந்தியா மாறிவிடும் அபாயம் உள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதலிடம் பெறுகிறதோ இல்லையோ, மக்கள் தொகையில் முதலிடம் பெற்றுவிடும். 2024ஆம் ஆண்டு, மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நாற்பது ஆண்டுகள் ஆகும். மக்கள்தொகை அதிகரிப்பால் உணவு பற்றாக்குறை, வேலை வாய்ப்பின்மை ஆகியவை ஏற்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏன் இந்தியாவில்கூட அண்டை மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் இன்னும் தொடர்ந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகிறோம். இதனால், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில், விவசாயிகள் பயிர் செய்ய முடியாத அளவுக்கு நிலம் நச்சுத் தன்மை அடைந்திருக்கும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இதையும் படிங்க : போலீஸ் மீது நடவடிக்கை வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!