வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளியான கலைவாணி மனநலம் பாதிக்கப்பட்டவர். இதுவரை மாற்றுத்திறனாளி சான்றிதழோ, அரசு உதவித்தொகையோ பெறாதவர். இதுவரையிலும் இவரது தாயாரின் முதியோர் உதவித் தொகையான மாதம் ஆயிரம் ரூபாயைக் கொண்டே செலவுகளைச் சமாளித்துவந்தனர். இந்நிலையில் தனது தாயாருக்கும் உடல்நிலை சரியில்லாததால் உணவுக்கே அவதிப்பட்டுவந்துள்ளார்.
இது குறித்த தகவல் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்குத் தெரியவர, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கும், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியின்கீழ் 15 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும் வருவாய்த் துறையின் மூலமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியும், பசுமை வீடு திட்டத்தின்கீழ் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் இலவசமாக வீடு கட்டித் தரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குத் தேவையான ரேஷன் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உடை ஆகியவற்றை செஞ்சிலுவைச் சங்கம், சிறப்பு வட்டாட்சியர் ஆகியோர் வழங்கினர். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் கலைவாணியின் வீட்டிற்கு நேரில் சென்று உதவிப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க : உடனுக்குடன்: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது