சென்னை: யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த பெற்றோருக்கு பிறந்த தனக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி பெண் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த ரம்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 1984ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நடந்தபோது, அங்கிருந்து தன் பெற்றோர் விசா பெறாமல் இந்தியா வந்து சென்னை சாஸ்திரி பவனில் உரிய அனுமதி பெற்று 2019ம் ஆண்டு வரை சென்னையில் தங்கி இருந்தனர்; அதன் பின்னர் அவர்கள் கோவைக்கு இடம்பெயர்ந்தனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'கரோனா காலகட்டத்தில், வெளிநாட்டினருக்கான மண்டல அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் அனுமதி பெற முயற்சித்தபோது விசா இல்லாமல் வெளிநாட்டினர் தங்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், தன் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும்படி வெளிநாட்டவருக்கான மண்டல அலுவலகம் உத்தரவிட்டது. இலங்கைக்கு சென்று அங்கு பாஸ்போர்ட்டை ஒப்படைத்த பின்னர் இந்தியாவிற்கு திரும்பி வந்து உரிய முறையில் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: பெண் காவலருக்கு மட்டும் தண்டனை விதித்ததை ஏற்க முடியாது! உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
இந்தியாவில் பிறந்து, பிறப்பு சான்றிதழ் பெற்று, கோவையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து, இங்கேயே திருமணம் செய்திருக்கும் தமக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.' என்று ரம்யா தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்திக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளமுகில் ஆஜரானார். அவர் தமது வாதத்தின்போது, 'இந்தியாவில் இருந்து சென்ற மலையக தமிழர்களான மனுதாரரின் பெற்றோர், யுத்தகாலத்தில் மீண்டும் இந்தியா திரும்பினர். அவர்களுக்கு மனுதாரர் 1987ம் ஆண்டு பிறந்தார். தொடர்ந்து தற்போது வரை அவர்கள் கோவையில் வசித்து வருகின்றனர்.' என்று தமது வாதத்தை முன்வைத்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபு மனோகர், 'இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்' என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, இந்த மனு தொடர்பாக மத்திய அரசின் உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.