வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கள்ளிச்சேரி கிராமம் அருகில் குடியிருப்பு பகுதிகளுக்குப் பின்புறம் அமைந்துள்ள மலைப் பகுதியில் இன்று காலை சிறுத்தைக் குட்டி ஒன்று இறந்து சடலமாகக் கிடந்தது.
இதுதொடர்பாக பேரணாம்பட்டு வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக வனச்சரகர் சங்கரய்யா தலைமையிலான, வனத் துறையினர் விரைந்து வந்து இறந்து கிடந்த சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் முன்னிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா கால் நடை மருத்துவக் குழுவினர் அதே இடத்தில் சிறுத்தைக் குட்டியை உடற்கூறாய்வு செய்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் பிரதீப் கூறுகையில், இறந்து கிடந்த ஆண் சிறுத்தைக் குட்டி சுமார் ஆறு மாத வயதுள்ளது என்றும், தாய் சிறுத்தையிடம் பால் குடித்தபோது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். உடற்கூறாய்வுக்குப் பின்னர் சிறுத்தைக் குட்டியின் சடலம் பேரணாம்பட்டு பங்களாமேட்டில் உள்ள வன ஓய்வு விடுதி வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்!