வேலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 2020ஆம் ஆண்டிற்கான தணிக்கை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் நிதிகளில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளால் மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து நிர்வாக குழுவைக் கலைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.
அடுத்த, 15 நாள்களுக்குள் புதிய நிர்வாக குழுவைத் தேர்வு செய்ய வேண்டும். அதுவரை சங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பழைய நிர்வாகிகள் சங்கத்தின் உள்ளே செல்வதை தடுக்க செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகத்திற்கு வருவாய் அலுவலர் சீல் வைத்தார். கடந்த 21ஆம் தேதி வேலூர் செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் இயங்கும், வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ள சேவ சமாஜத்தின் அறை மற்றும் காகிதப் பட்டறை பகுதியில் அமைந்துள்ள பெண் பணியாளர்கள் விடுதிக்கும் (Working Women Hostel) கோட்டாட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று(டிச. 31) செஞ்சிலுவைச் சங்க அலுவலகம், சேவ சமாஜத்தின் அறை, பெண் பணியாளர்கள் விடுதி (Working Women Hostel) அகியவற்றுக்கு வைக்கப்பட்ட சீல் கோட்டாட்சியர் கணேஷ் தலைமையில் உடைக்கப்பட்டு, அதன் சாவி புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிதாக உஷா நந்தினி, அஞ்சும் சக்திவேல், பி.டி.கே. மாறன், காந்தி லால் பட்டேல் உள்பட 9 பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவைத் தலைவராக கோட்டாட்சியர் கணேஷ் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு