முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் ஆகிய இருவரும் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், நளினி லண்டனில் வசிக்கும் தனது மகளின் திருமணத்திற்காக பரோல்கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 25ஆம் தேதி வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் பரோலில் வெளியே வந்தார், நளினி.
பின்னர், அவர் வேலூர் வள்ளலார் அடுத்த புலவர் நகர் பகுதியில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகி இல்லத்தில் வசித்தார். இதற்கிடையில் நளினியின் பரோல் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 51 நாட்கள் பரோல் முடிவடைந்ததால், இன்று திட்டமிட்டபடி நளினியை மீண்டும் சிறைக்குச் அழைத்துச் செல்ல காவல்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
சரியாக மாலை 3.30 மணி அளவில் நளினி தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவர் கண்ணீர் தேங்கிய முகத்துடன் கையில் ஒரு பையுடன் புறப்பட்டார். துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் நளினியை பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். லண்டனில் வசிக்கும் தனது மகளின் திருமணத்தை நேரில் பார்ப்பதற்காகவே பரோலில் வெளிவந்தார், நளினி. ஆனால், தற்போது வரை அவரது மகள் லண்டனிலிருந்து இந்தியா வருவதில் அலுவல் ரீதியிலான தாமதம் ஏற்பட்டதால், அவர் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டது. திருமணமும் நிச்சயமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நளினி எதற்காக பரோலில் வெளி வந்தாரோ அந்த காரியம் முடிவடையாததால், அவர் சோகத்துடன் காணப்பட்டார். இதனால் தனது மகளின் திருமணத்தை நடத்தி வைக்கமுடியாத சோகத்துடன் கண்ணீர் மல்க சிறை திரும்பினார், நளினி.
நளினியின் கண்ணீருக்கு காலம் தான் உரிய தீர்வை வழங்கமுடியும்..!